தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் குறைந்த கட்டணம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், சிகிச்சைக்கு குறைந்த கட்டணம் மட்டுமே வழங்கப்படுவதாக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 12 hours ago

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பான கோப்புப்படம்
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், நிதித்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நலனில் அக்கறை கொண்டு கடந்த 2008ஆம் ஆண்டு முதல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியஇன் பெயரில் மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது இது பல்வேறு வடிவில் பரிணாமம் பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவால், பல்வேறு பலன்களை கொண்ட வடிவில் முழுமையாகக் கட்டணமில்லா சிகிச்சை (Cashless Treatment) என செயல்படும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் மூன்றாம் நபர் ஒப்பந்தம் மூலம் 2021 செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 18 மாவட்டங்களுக்கு MD India காப்பீடு நிறுவனத்திடமும், 20 மாவட்டங்களுக்கு Medi Assist காப்பீடு நிறுவனத்திடமும் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒப்பந்தம் செய்த நாள் முதல் இன்று வரை ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு முழுமையான மருத்துவக் காப்பீடு வழங்காமல் காப்பீடு என்ற பெயரில் Package அடிப்படையில் குறைவான மருத்துவக் காப்பீட்டுத் தொகையை (40 - 50 சதவீதம்) மட்டும் வழங்கி வருகின்றது. இதுசார்ந்து விசாரிக்கும் பொழுது, குறைந்த தொகையில் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதன் காரணமாக Package அடிப்படையில் குறைவான மருத்துவக் காப்பீட்டுத் தொகையை மட்டும் வழங்க இயலும் என்று கூறப்படுகிறது. அத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் சிலர் மிகக் குறைந்த காப்பீடு வழங்கியுள்ளதைத் தெரிவிக்கும் போது, கூடுதல் தொகை வழங்கப்படுவதில்லை.

Package முறையில் சிகிச்சை அளிக்க ஒத்துக்கொண்டு கையொப்பமிட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் ஒருவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது வழங்கப்படும் கட்டணம், ஒப்பந்தத்தை விடக் கூடுதலாக மருத்துவமனை பெறும் நிகழ்வுகளில், தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த ஏற்பாடும் இந்தத் திட்டத்தை நிர்வகிக்கக்கூடிய United India, MD India, Medi Assist நிறுவனத்திடம் இல்லை.

தற்போது இருதய சிகிச்சைக்கான சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவமனையில் Single Stent வைப்பதற்காக ரூ.1,98,000 கட்டணமெனில் எங்களால் ரூ.97 ஆயிரம் மட்டுமே வழங்க முடியும் என்று Mid India, Medi Assist வழங்குவதோடு, மீத தொகையை நோயாளி செலுத்தி வரும் நிலைதான் உள்ளது. Ortho Single Plate Operation 80,000 பட்டியலிட்டால் ரூ.30,000 கிடைக்கிறது.

இதுபோன்றே எல்லா அறுவை சிகிச்சைகளிலும் நிலைமை உள்ளது. கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம் கட்டணம் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்ட போதும், தற்போது ரூ.19 ஆயிரம் முதல் 21 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. தொடர்ந்து காப்பீட்டு நிறுவனங்களுடன் வழக்காடி தான் கூடுதல் தொகை பெற வேண்டிய நிலை உள்ளது.

இதையும் படிங்க:ஆவடி மாநகராட்சி பகுதியில் மழை பாதிப்பு, மீட்புப் பணிகள் குறித்த முழுத் தகவல்!

தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் பெறும் நிகழ்வுகளில் வழங்கப்பட்ட புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கூடுதலாக பெறப்பட்ட தொகையை மீண்டும் பணியாளர்களிடம் வழங்கும் வகையில், எவ்வித நடவடிக்கையும் கடந்த 2 ஆண்டுகளாக எடுக்கப்படவில்லை. இதுபோன்ற நிகழ்வுகளால் அரசின் மீது நம்பிக்கை வைத்து காப்பிட்டு திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியர், பாதிக்கும் மேற்பட்ட தொகையினை அவரே செலுத்துகிற போது திட்டத்தின் மீதும், அதை நிர்வகிக்கிற அரசின் மீதும் அவநம்பிக்கை கொள்ளும் நிலையை நிறுவனங்கள் ஏற்படுத்தி வருகின்றன.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நோயாளிகள் சிரமம் இன்றி சிகிச்சை பெற, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளை சந்திக்கும் ஏற்பாடும் இல்லை. 25 சதவீதம், 30 சதவீதம், 50 சதவீதம் காப்பீடு கிடைக்கும் நிலையில் மாற்றம் ஏற்படுத்தி கட்டணம் இல்லா சிகிச்சை உறுதிப்படுத்தினால் இத்திட்டம் உயிர் காக்கும் திட்டம் என்று கூறலாம். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்குகிறோம் என்று சொல்லி தமிழக அரசிடம் திட்டத்தைப் பெற்ற United India insurance பல கோடி மக்களுக்கான இன்சூரன்ஸ் வழங்கும் பொதுத்துறை நிறுவனமாகும்.

பாதிக்கும் குறைவான தொகை வழங்கும்போது இன்சூரன்ஸ் நிறுவனங்களினுடைய அலுவலர்களை தொடர்பு கொண்டால் முறையான பதில் வழங்கப்படுவதில்லை. இதனால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், மருத்துவமனைகள் தரப்பிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டதை விட பல மடங்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. இன்சூரன்ஸ் நிறுவனமும், ஒப்பந்தம் செய்த தொகையை விடக் குறைந்த தொகை வழங்குவதால் இரு நிலைகளிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அதனால், கூடுதல் தொகை வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காப்பீட்டு நிறுவனங்களினுடைய மேல்முறையீட்டு அலுவலர்கள் இலகுத் தன்மையுடன் செயல்படவும், மேல்முறையீட்டு மனுக்களை பரிசீலித்து தேவைப்படும் நிகழ்வுகளில் முழு காப்பீட்டுத் தொகை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளிகள், ஓய்வூதியர்கள் மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும் என்ற முறையில் போடப்பட்ட கட்டணமில்லா சிகிச்சை அரசாணையை அணைத்து மருத்துவமனைகளும் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு அரசாணைப்படி கட்டணம் இல்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். காப்பீடு திட்டத்தில் மருத்துவமனையில் சேரும் அனைவரிடமும் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்சூரன்ஸ் நிறுவனத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும். ஆசிரியர்களின் புகார்கள் தொடர்பாக உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். தமிழக அரசு காப்பிட்டு திட்டத்தில் அதிகமாக பணம் வசூலிக்கும் மருத்துவமனைகளுடைய மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details