தமிழ்நாடு

tamil nadu

மதுரை மீனாட்சி கோயிலுக்கு 3 ஆண்டுக்குப் பின்னர் வைகையிலிருந்து திருமஞ்சன நீர்! சிறப்பு அபிஷேகம்.. - Madurai Meenakshi Amman Temple

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 12:59 PM IST

Thirumanjana Neer Abhishekam: மதுரை மீனாட்சியம்மன் கோயில் முதற்கால பூஜைக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு வைகை ஆற்றில் இருந்து திருமஞ்சன நீர் எடுத்துச் செல்லப்பட்டது.

வைகை ஆற்றில் இருந்து எடுத்துச் செல்லப்படும் திருமஞ்சன நீர்
வைகை ஆற்றில் இருந்து எடுத்துச் செல்லப்படும் திருமஞ்சன நீர் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தினமும் முதற்கால பூஜைக்கு வைகை ஆற்றில் இருந்து 'திருமஞ்சன நீர்' கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கால் இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கிற்குப் பிறகு வைகை ஆற்றங்கரையில் தடுப்பணை கட்டப்பட்டு, நீர் திறக்கப்பட்டிருந்ததால் புனித நீர் உள்ள கிணற்றை சுற்றி ஆகாயத்தாமரைகள் மற்றும் முட்புதர்கள் படர்ந்திருந்தன.

வைகை ஆற்றில் இருந்து திருமஞ்சன நீர் கொண்டு சென்ற வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், கிணற்றைச் சுற்றி புனரமைக்கப்பட்டது. மேலும் தினமும் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய திருமஞ்சன நீர் பயன்படுத்தப்படாமல், கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றிலிருந்து முதற்கால பூஜைக்கு புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு வந்தது.

இதனால், பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து பாரம்பரிய முறைப்படி வைகை ஆற்றில் உள்ள கிணற்றிலிருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முதற்கால பூஜைக்கு திருமஞ்சன நீர் கொண்டு செல்ல மீண்டும் அறங்காவலர் குழுத்தலைமையில் முடிவெடுக்கப்பட்டது. மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையரும், நிர்வாக அதிகாரியுமான கிருஷ்ணன் தலைமையில், புனித நீர் அமைக்கப்பட்டுள்ள கிணற்றுப் பகுதிக்கு நடந்து செல்வதற்கும், அதனைச் சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்யப்பட்டும் பூஜை நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக வைகை ஆற்றில் இருந்து மீனாட்சி அம்மன் கோயில் முதற்கால பூஜைக்கு எடுத்துச் செல்லப்படாமல் இருந்த திருமஞ்சன நீர், தற்போது மீண்டும் இன்று கொண்டு செல்லப்பட்டது. வைகை ஆற்றங்கரையிலிருந்து மேளதாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வெள்ளிக்குடத்தில் புனித நீரை சுமந்து சென்று, யானை பசுவுடன் உலா வந்து, கிழக்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய திருமஞ்சன நீரை கொண்டு சென்றது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: "ரயில் ஓட்டுநர்களுக்கு ஓய்வு இல்லை" - மத்திய அமைச்சரிடம் மனு அளித்த சு.வெங்கடேசன்! - TRAIN ACCIDENTS

ABOUT THE AUTHOR

...view details