தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாக்கெட் பால் விலை உயர்வா? ஆவின் நிறுவனம் விளக்கம்!

வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

டிடிவி தினகரன்,அன்புமணி ராமதாஸ்
டிடிவி தினகரன்,அன்புமணி ராமதாஸ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி, லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை. எனவே,கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க.. தீபாவளியை முன்னிட்டு ஆவின் வெளியிட்ட இனிப்பான செய்தி!

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளபதிவில், “தமிழ்நாட்டில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பச்சை உறை பாலில் உள்ள அதே 4.5 சதவீத கொழுப்புச் சத்து, அதே 9 சதவீத கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் (Solids Not Fat -SNF) கொண்ட பாலை ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில் திருச்சி மண்டலத்தில் ஆவின் அறிமுகம் செய்துள்ளது.

கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ.44 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலின் விலையை மறைமுகமாக உயர்த்தும் ஆவின் நிறுவனத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது. ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

கிரீன் மேஜிக் 500 மிலி உறைகளில் ரூ.22 க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மிலி உறைகளில் ரூ.25-க்கு விற்கப்படும். அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும். ஆவின் கிரீன் மேஜிக் பாலில் உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு இல்லாத சத்துகளுக்கும், ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலில் உள்ள சத்துகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பால் உறையின் வண்ணத்தை மாற்றி பிளஸ் என்ற வார்த்தையை கூடுதலாக சேர்ப்பதற்காக ரூ.11 அதிகம் வசூலிப்பது பகல் கொள்ளையாகும்.

தமிழ்நாடு முழுவதும் இந்த வகை பாலை அறிமுகம் செய்து விட்டு, லிட்டர் ரூ.44க்கு விற்கப்படும் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தி விடுவது தான் ஆவின் நிறுவனத்தின் திட்டம் ஆகும். இதன் மூலம் ஆவின் பச்சை உறை பாலை நுகர்வோர் வேறு பெயரில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். விலை உயர்வை விட கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், விலை உயர்வு அதிகமாக தெரியக்கூடாது என்பதற்காக ஓர் உறையின் விலையை ரூ.3 உயர்த்தி விட்டு, பாலின் அளவை 50 மிலி குறைத்திருப்பது தான்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிந்தைய மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக பால் விலை உயர்த்தப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி ஆரஞ்சு வண்ண உறையில் விற்கப்படும் நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆவின் பச்சைப் பாலுக்கு மாற்றாக அதே விலையில் 3.5 சதவீத என்ற குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட ஆவின் டிலைட் பாலை அறிமுகம் செய்து மறைமுக விலை உயர்வை அரசு திணித்தது.

அரசுத்துறை நிறுவனமான ஆவின் அதிக லாபம் ஈட்டுவதற்காக அநீதியான வழிமுறைகளை பின்பற்றக் கூடாது. அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஒரு லிட்டர் ரூ.44 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தாமல், இப்போது வினியோகிக்கப்படுவதைப் போன்றே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் பாக்கெட்டின் பெயரை மாற்றி விலையை உயர்த்த முடிவா? ஏழை, எளிய மக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்ற முயற்சிக்கும் ஆவின் நிர்வாகத்தின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டில் Green Plus எனும் பெயரை Green Magic Plus என மாற்றி 500 மி.லி எடை கொண்ட பாலை 450 மி.லிட்டராக குறைப்பதோடு அதன் விலையை லிட்டருக்கு 11 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆட்சிப் பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் பால் மற்றும் பால் பொருட்களின் விலையை பலமுறை உயர்த்திய திமுக அரசு, பாலின் தரத்தை உயர்த்தாமல் பெயரை மட்டும் மாற்றி ஆண்டுக்கு ஒருமுறை மறைமுகமாக விலையை உயர்த்துவதோடு, அதன் எடையையும் குறைக்க திட்டமிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், பால் பாக்கெட்டுகளின் எடை மற்றும் கொழுப்புச் சத்தை குறைத்து அதன் விலையை உயர்த்தும் முடிவை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும் என பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, ஏழை, எளிய மக்களை நேரடியாக பாதிக்கும் பால் விலையை உயர்த்தும் முடிவை கைவிடுவதோடு, ஆவின் நிர்வாகத்தின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

ஆவின் நிறுவனம் விளக்கம்: “ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிறபால்) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டும் மற்றும் பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பொது மக்களிடம் கருத்துக்களையும் கேட்கப்பட உள்ளது. எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் வகைகளை விற்பனை தொடங்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே தொடங்கப்படும்" என ஆவின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு.வினீத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details