தமிழ்நாடு

tamil nadu

கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடிக்கு மாவு கட்டு..! கடலூரில் நடந்தது என்ன? - Cuddalore Rowdy Arm Broken

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 2:59 PM IST

Rowdy Murder Threaten to shopkeeper: சிதம்பரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றதை தட்டிக்கேட்ட மளிகை கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது எழும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கௌஷிக் மற்றும் ராகுல்
கௌஷிக் மற்றும் ராகுல் (Credits- ETV Bharat Tamil Nadu)

கடலூர்:கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள வாகீச நகர் கோயில் தெரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் சர்புதீன். இவரது மளிகைக் கடைக்கு முன்பாக பள்ளி மாணவர்கள் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அதேபகுதியில் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த ராகுல் (28), கௌசிக் என்ற கௌசிலன் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதைக் கண்ட சர்புதீன் "மாணவர்கள் நிற்கிறார்கள், இவ்வளவு வேகமாக எதற்கு" என்று கேட்டதாகவும், அதனால் கோபமடைந்த ராகுல் மற்றும் கௌசிக் கடைக்காரரிடம் வந்து, கத்தியைக் காட்டி மிரட்டி "பெட்ரோல் ஊற்றி பிளாஸ்ட் செய்துவிடுவேன்" எனக் கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகிலிருந்த நபர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையே, கூட்டத்திலிருந்த ஒருவர் இந்த ரவுடிகள் பேசியதை வீடியோவாக எடுத்து, சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை அடுத்து அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ராகுல் மற்றும் கௌஷிக் இருவரையும் போலீசார் தேடிவந்துள்ளனர்.

இந்த நிலையில், கௌஷிக் என்பவரை போலீசார் கண்டறிந்து கைது செய்ய முற்படும்பொழுது அங்கிருந்து அவர் தப்பி ஓடியதாகவும், அப்பொழுது கீழே விழுந்ததில் அவருடைய கை எலும்பு முறிவடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, போலீசார் கௌஷிக்கை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள ராகுலையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, ராகுல் இதுபோன்று தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதுமட்டும் அல்லாது, கடலூரில் இதுபோன்று வியாபாரிகளையும், பொதுமக்களையும் ரவுடிகள் கத்தி போன்ற ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:அண்ணனின் திருமணத்தை மீறிய உறவால் தம்பிக்கு நேர்ந்த சோகம்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details