தமிழ்நாடு

tamil nadu

திருச்சி அருகே பிரதமர் மோடிக்கு கோயில்.. 1,000 பேருக்கு கிடா விருந்து வழங்க முடிவு! - Temple for PM Modi

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 8:16 PM IST

Updated : Jul 12, 2024, 9:43 PM IST

PM Modi Temple: திருச்சி துறையூர் அருகே பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய நபர், மூன்றாவது முறை அவர் பிரதமராக வந்ததற்காக பழனி முருகன் கோயிலில் நேர்த்திக்கடனைச் செலுத்தவும் முடிவு செய்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு கட்டிய கோயில்
பிரதமர் மோடிக்கு கட்டிய கோயில் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள எரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். பல ஆண்டுகளுக்கு முன்பாக துபாயில் வேலை பார்த்து வந்த அவர், தனது சொந்த ஊருக்கு திரும்பி விவசாயத்தில் ஈடுபட்டு தற்போது முழு நேர விவசாயியாக உள்ளார். பிரதமர் மோடி மீது அளவு கடந்த பற்றுள்ள இவர், தனது நிலத்தில் அவருக்கு கோயில் கட்டி தினமும் பூஜை செய்து வழிபாடு செய்து வருகிறார்.

பிரதமர் மோடிக்காக கட்டப்பட்ட கோயில் (Credits - ETV Bharat Tamil Nadu)

இது குறித்து பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய விவசாயி சங்கர் கூறியதாவது, "பிரதமர் மோடியின் திட்டங்களால் பயனடைந்த நான், அவர் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக என்னுடைய சொந்த நிலத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முதலாக அவரது உருவச்சிலை அமைத்து கோயில் கட்டினேன்.

சுமார் 1.25 லட்சம் ரூபாய் சொந்த செலவில் ஆறு மாதங்களில் கோயில் கட்டினேன். இவரது ஆட்சிக் காலத்தில் அளித்த திட்டங்களால் நல்ல மகசூல் கிடைத்தது. அதனால், அவரை கடவுளாக நினைத்து தினமும் பூஜை செய்து, வழிபாடு நடத்தி வருகிறேன். ஒவ்வொரு சாகுபடியிலும் கிடைக்கும் லாபத்தில் 10 ஆயிரம் ரூபாய் வீதம் எடுத்து வைத்து, ஐந்து ஆண்டுகளாக கணிசமான தொகை வைத்துள்ளேன்.

அவர் மூன்றாவது முறை பிரதமாக வேண்டும் என்று பழனி மலை முருகனிடம் வேண்டுதல் வைத்திருந்தேன். அந்த வேண்டுதல் தற்போது நிறைவேறி உள்ளதால், வரும் தை மாதம் முடிந்த பிறகு தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடனைச் செலுத்த உள்ளேன். மேலும், ஆயிரம் பேருக்கு கிடா வெட்டி அன்னதானம் வழங்க, என் வயலில் விளைந்த நெல்லில் 10 மூட்டை வைத்துள்ளேன்.

மேலும், பிரதமர் மோடிக்கு கட்டியுள்ள கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. எனது நிலத்தில் ஒரு பகுதியை இந்த கோயிலுக்காக எழுதி பத்திரம் போட்டு வைத்துள்ளேன். என்னுடைய காலத்திற்குப் பிறகும் இந்த கோயில் நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

எனது தொட்டத்தில் விளையும் பொருட்களை எல்லாம் கோயிலுக்கு கொண்டு வந்து படையலிட்ட பிறகு தான் வியாபாரத்திற்கு கொண்டு செல்வேன். பிரதமர் மோடி நீண்ட நாட்களுக்கு நலமுடன் வாழ வேண்டும். அடுத்த முறையும் அவரே பிரதமராக வர வேண்டும். மேலும், விவசாயிகளுக்கான இன்னும் பல நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பஞ்சாக்கை ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. ஆதினங்கள் பங்கேற்பு!

Last Updated : Jul 12, 2024, 9:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details