கடலூர்:கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் ஆணையம்குப்பம் எனும் இடத்தில் நேற்று (செப்.12) நள்ளிரவு கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற கார் ஒன்றின் மீது சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை அடுத்து, இந்த விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பரங்கிப்பேட்டை போலீசார் உயிரிழந்த ஐந்து பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டு கருப்பூர் பகுதியைச் சேர்ந்த யாசர் ஹராபத் (40), மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நக்கம்பாடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது அன்வர் (56), குத்தாலம் நக்கம்பாடி ஸ்ரீ கண்டபுரம் ஹாஜியார் தெருவைச் சேர்ந்த ஹாஜிதா பேகம் (62), திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சராபாத் நிஷா (30) மற்றும் 3 வயது அப்னான் என்ற சிறுவன் என்பது தெரியவந்தது.