சென்னை:தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தாய் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளுள் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த, சுமார் 30 வயதுடைய ஆண் பயணி. இரண்டு பெரிய அட்டை பெட்டிகளுடன் விமானத்தில் இருந்து கன்வேயர் பெல்டில் வந்த அட்டைப் பெட்டிகளை எடுத்துக்கொண்டார். பின் விமான சுங்கத்துறை அதிகாரிகளிடம் தான் சுங்க தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் கொண்டு வரவில்லை எனக் கூறி கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார்.
அப்போது அவர் மீது சந்தேகமடைந்த சென்னை விமான நிலைய சுங்கதுறை அதிகாரிகள் அவரை நிறுத்தி இரண்டு அட்டைப்பெட்டிகளிலும் என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு அந்த பயணி குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், மற்றும் சாக்லேட், பிஸ்கட்கள் இருக்கின்றன என்று கூறினார். அதன் பின் சோதனையில் இறங்கிய சுங்க அதிகாரிகள் இரண்டு அட்டைப் பெட்டிகளையும் திறந்து பார்த்தனர்.
அப்போது அதில் நிறங்களை மாற்றிக் கொள்ளும் தன்மையுடைய (Baby Iguana) எனப்படும் 402 ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மத்திய வன உயிரின காப்பகம் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விமான நிலையத்திற்கு வந்த அதிகாரிகள் பச்சோந்திகளை ஆய்வு செய்தனர்.