தமிழ்நாடு

tamil nadu

ஆடி அமாவாசை: கும்பகோணம் ஆஞ்சநேயருக்கு ஒரு டன் எடையில் 40 வகை காய்கனிகளால் சாகம்பரி அலங்காரம்! - Aadi Amavasai 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 9:23 PM IST

Aadi Amavasai 2024: ஆடி மாத அமாவாசை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள 9 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சாமிக்கு ஒரு டன் எடையிலான 40 விதமான காய்கனிகளைக் கொண்ட சிறப்பு சாகம்பரி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சாகம்பரி அலங்காரத்தில் ஆஞ்சநேயர்
சாகம்பரி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் (Credits- ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 9 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு கல்வியில் தடை, சுணக்கம் நீங்க வெற்றிலை மாலை சாற்றியும், பிரிந்த தம்பதியினர் சேர தேங்காய் மாலையும், குழந்தை பேறு கிட்ட சந்தனக் காப்பும் சாற்றி வழிபடுவது உள்ளிட்ட பல முக்கிய பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.

இத்தகைய பெருமை கொண்ட ஆஞ்சநேயரைப் போற்றி வணங்கும் வகையில், கும்பகோணம் பாலக்கரை விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், நல்ல மழை பெய்து நவதானியங்கள், காய்கனிகள் உள்ளிட்ட அனைத்து வேளாண் பொருட்களும் அமோக விளைச்சல் காணவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், உலக மக்கள் நலன் வேண்டியும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

அந்த வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 9 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, ஒரு டன் எடையிலான முட்டை கோஸ், கேரட், முள்ளங்கி, கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு, வாழைக்காய், குடை மிளகாய், கத்திரிக்காய் என மொத்தம் ஒரு டன் எடையுள்ள 40 விதமான காய்கனிகளைக் கொண்டு சாகம்பரி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டது.

மேலும், சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது. 40 விதமான காய் கனிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திரிசதி மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும், ஆயிரத்து ஒரு முறை இராமநாம ஜெபமும் கூற, சிறப்பு பூஜைகளுடன், குங்குமம் மற்றும் உதிரிப்பூக்களைக் கொண்டு அர்ச்சனைகள் செய்த பிறகு மகாதீபாராதனையுடன், 16 விதமான சோடஷ உபசாரமும் செய்யப்பட்டது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

இந்த ஆஞ்சநேயரிடம் தங்களது வேண்டுதலை வெள்ளைத் தாளில் எழுதி, அதனை மட்டை தேங்காயுடன் சிவப்பு நிறத்துணியில் கட்டி அமாவாசை பூஜையில் வைத்து பிரார்த்தனை மேற்கொண்டால், எண்ணிய காரியம் மூன்று அமாவாசை காலங்களுக்குள், அதாவது அடுத்த 90 நாட்களில் முழுமையாக நிறைவேறும் என்பது அனுமன் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சுருளி அருவியில் 5 நாட்களுக்கு பிறகு அனுமதி; மகிழ்ச்சி வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகள்!

ABOUT THE AUTHOR

...view details