தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 9 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு கல்வியில் தடை, சுணக்கம் நீங்க வெற்றிலை மாலை சாற்றியும், பிரிந்த தம்பதியினர் சேர தேங்காய் மாலையும், குழந்தை பேறு கிட்ட சந்தனக் காப்பும் சாற்றி வழிபடுவது உள்ளிட்ட பல முக்கிய பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.
இத்தகைய பெருமை கொண்ட ஆஞ்சநேயரைப் போற்றி வணங்கும் வகையில், கும்பகோணம் பாலக்கரை விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், நல்ல மழை பெய்து நவதானியங்கள், காய்கனிகள் உள்ளிட்ட அனைத்து வேளாண் பொருட்களும் அமோக விளைச்சல் காணவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், உலக மக்கள் நலன் வேண்டியும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அந்த வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 9 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, ஒரு டன் எடையிலான முட்டை கோஸ், கேரட், முள்ளங்கி, கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு, வாழைக்காய், குடை மிளகாய், கத்திரிக்காய் என மொத்தம் ஒரு டன் எடையுள்ள 40 விதமான காய்கனிகளைக் கொண்டு சாகம்பரி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டது.