தமிழ்நாடு

tamil nadu

பகுதி நேர ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,500 ஆக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 4:58 PM IST

TN Govt: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றிற்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தினை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூபாய் 12 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,500 ஆக உயர்வு
பகுதி நேர ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,500 ஆக உயர்வு

சென்னை:பள்ளிக்கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் இசை, தையல்,ஓவியம், நடனம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை கற்றுத் தருவதற்குச் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் 2011ஆம் ஆண்டில் 16,549 பேர் செய்யப்பட்டனர். அவர்களில் தற்பொழுது 10, 359 பேர் பணியிலிருந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வருகின்றனர். 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட 16 ஆயிரத்து 549 பல்வேறு சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் தற்போது பணியில் இருப்பவர்கள் 12,105 ஆசிரியர்கள். இவர்கள் அனைவரும் 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு தற்போது 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.

இவர்களின் முந்தைய கோரிக்கையான ஓய்வு பெறும் வயதினை 60 ஆக்குவது மற்றும் அவர்களுக்கு விரும்பிய மாவட்டத்திற்கு மாறுதல் அளிப்பது என்பதை அரசு ஏற்று ஏற்கனவே நடைமுறைப்படுத்தி உள்ளது , தற்போது நிதி நெருக்கடி இருந்தாலும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தினை 12 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அளித்துள்ள கடிதத்தில், தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தற்பொழுது 12,105 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த திட்டம் முடிவுறும் வரை இவர்களது நியமனமானது முழுவதும் தற்காலிகமானது எனவும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் எனவும், இவர்களது பணி நியமன ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களது பணி நேரமானது ஒரு வாரத்திற்கு 9 மணி நேரமாகும் ( வாரத்தில் 3 அரை நாட்கள் மட்டும்) என அதில் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் 12,105 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆண்டிற்கு 11 மாதம் எனத் தொகுப்பூதியம் 10 ஆயிரத்திலிருந்து 12,500 என உயர்த்தப்படுகிறது என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்.. மூவர்ண கொடியை ஏற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு!

ABOUT THE AUTHOR

...view details