தமிழ்நாடு

tamil nadu

கும்பகோணம் கௌதமேஸ்வர சுவாமி கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்!

Kumbakonam Car Festival: கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான, கௌதமேஸ்வரசுவாமி கோயில் புதிய தேரின் வெள்ளோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 1:19 PM IST

Published : Feb 7, 2024, 1:19 PM IST

Updated : Feb 10, 2024, 6:19 AM IST

கௌதமேஸ்வர சுவாமி கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
கௌதமேஸ்வர சுவாமி கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

கௌதமேஸ்வர சுவாமி கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சைவத்தலங்களில் ஒன்றான சௌந்தரநாயகி சமேத கௌதமேஸ்வரசுவாமி கோயிலில், மரத்தேர் சிதலமடைந்து பல ஆண்டுகள் கடந்து விட்டதால், புதிய மரத்தேர் அமைக்க வேண்டும் என கும்பகோணம் பகுதி மக்கள் அறநிலையத்துறைக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பின், அறநிலையத்துறை சார்பில் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தேர் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அரும்பாவூர் வாசு தலைமையில் 15க்கும் மேற்பட்ட சிற்பிகள் கொண்ட குழுவினரால், இலுப்பை மரத்தில் புதிய மரத்தேர் அமைக்கும் பணி தொடங்கி, ஒரு ஆண்டாக நடைபெற்ற நிலையில், 10 அடி நீளம், 10 அடி அகலம், 11.5 அடி உயரத்தில் 21 டன் எடையில் பிரத்யேகமாக, திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து 13.5 அடி நீள அச்சில், 5 அடி உயரம் கொண்ட 4 பெரிய இரும்பு சக்கரங்களுடன் புதிய மரத்தேர் உருவானது.

இதனை அடுத்து, இப்புதிய மரத்தேரின் வெள்ளோட்டம் இன்று (பிப்.7) மயிலாடுதுறை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் புனித நீர் நிரப்பிய கடத்தை ஸ்தாபித்து சிறப்பு ஹோமம் வளர்த்து, அதன் பூர்ணாஹுதிக்குப் பிறகு மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின், புனிதநீர் கடத்தை தேருக்கு எழுந்தருளச் செய்யப்பட்டது.

அங்கிருந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, யானை மற்றும் நாட்டிய குதிரைகள் முன் செல்ல, 4 குதிரைகள் பூட்டப்பட்ட புதிய மரத்தேரின் வெள்ளோட்டத்தில் ஏராளமானோர் திரண்டு வடம் பிடித்து இழுக்க, மகாமக திருக்குளத்தைச் சுற்றி வலம் வர நடைபெற்றது. இதனை பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கண்டு ரசித்தனர்.

இந்நிகழ்வில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன், அறநிலையத்துறை உதவி ஆணையர் சாந்தா, கோயில் செயல் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:“ராம ராஜ்ஜியம் உரிமையற்றது.. நாடு முழுவதும் ஈ.வெ.ராமசாமி ராஜ்ஜியத்தை உருவாக்குவோம்” - கனிமொழி

Last Updated : Feb 10, 2024, 6:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details