திருச்சி:உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்து கொண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு நேற்றிரவு (பிப்ரவரி 23) திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “அகில இந்திய அளவில் ஆன்மிகம் முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய தீர்த்த அடையாளமாக உள்ளது அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா. இதில் கலந்து கொண்டு மக்கள் அனைவருக்கும் நற்பலன்கள் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தித்தோம்.
பிரணவ மந்திரங்களாக இருக்கக் கூடிய சரஸ்வதி, கங்கை, யமுனை சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடுபவர்களுக்கு உயர்ந்த புண்ணியம், சொர்க்கம் கிடைக்கிறது என்று ரிக் வேதம் சொல்கிறது. போகி அன்று தொடங்கிய இந்த மகா கும்பமேளா மகா சிவராத்திரி வரை நடைபெறும்.
இதில் முக்கிய பிரமுகர்கள் முதல் பாமரமக்கள், சிறிய குழந்தைகள் எனப் பக்தி ஸ்திரத்தையோ, இதுவரை 62 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இதுவரை 1,200-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த இடத்தில் இந்து சமயத்தின் மேன்மைகள், தன்மைகள் ஒரு சேர பார்க்க முடிகிறது. இந்த கும்பமேளா இந்திய ஒருமைப்பாட்டுக்கும், கலாச்சார பாரம்பரியத்துக்கும், சேவை மனப்பான்மைக்கும் உதாரணமாகத் தேசிய திருவிழாவாக திகழ்கிறது.
ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேட்டி (ETV Bharat Tamil Nadu) டிஜிட்டல் யுகத்திலும் மக்கள் மத்தியில் பக்தி நெறி ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஆன்மீக நெறிக்கும் பக்தி நெறிக்கும் எடுத்துக்காட்டாகக் கும்பமேளா அமைந்துள்ளது. காஞ்சி மடத்தின் மூலம் அங்கு மண்டபம் அமைத்து, கடந்த 40 நாட்களாக வேதபாட சாலைகள் மூலம் உலக நன்மைக்காக யாகங்கள், பூர்ணாஹூதி ஹோமங்கள், புனித பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் நடக்கிறது.
இதையும் படிங்க:ஈஷாவின் மகா சிவராத்திரி நிகழ்வுக்கு அனுமதி...விதிமீறல் இல்லை என மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை!
இந்த விழாவில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, தென்னாட்டுக்கும், வடநாட்டுக்கும் உள்ள பாரம்பரிய, கலாச்சாரங்கள் மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் குறித்த கருத்துகள் அவரிடம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரை தமிழகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அதனை அவர் ஏற்றுக் கொண்டார்." எனத் தெரிவித்தார்.