தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

90's கிட்ஸ் ஃபேவரைட் தேன் மிட்டாய் சாப்பிட வேண்டுமா? இப்படி செஞ்சி பெட்டிக்கடை நினைவுகளை ரிவிசிட் செய்யுங்க!

பெட்டிக்கடை கண்ணாடி ஜாரிலிருந்து தேன் மிட்டாய்யை எடுத்து சாப்பிட்ட ஞாபகம் இருக்கா? அந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வரணுமா? அப்ப பொட்டிக்கடையில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டில் தேன் மிட்டாயை செய்து பாருங்க...

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Lifestyle Team

Published : 4 hours ago

இன்றைய தலைமுறையினர் மத்தியில் இதன் மவுசு குறைந்திருக்கலாம்...ஆனால் ஆண்டு 2000க்கு முன்பாக பிறந்தவர்களுக்கு இந்த தேன் மிட்டாய் தான் கிங்கு. வீட்டில் காசு கொடுத்து ஏதாவது பொருள் வாங்கி வரச்சொன்னால், போனதற்கு கூலியாக தேன் மிட்டாயை சாப்பிட்டு வருவோம்..ஞாபகம் இருக்கா? பெட்டிக்கடையில் இருக்கும் கண்ணாடி ஜாரில் இருந்து நாம் சாப்பிட்ட தேன் மிட்டாயின் சுவை இப்போது எங்கு தேடினாலும் கிடைப்பதில்லை. அதற்காகவும், உங்கள் மலரும் நினைவுகளை கொண்டு வருவதற்காகவும் இந்த தேன் மிட்டாய் ரெசிபியை கொண்டு வந்திருக்கிறோம்..செய்து பாருங்கள்...

தேவையான பொருட்கள்:

  • மைதா மாவு - 1 கப்
  • கார்ன்ஃப்ளார் மாவு - 1 டீஸ்பூன்
  • பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
  • சர்க்கரை- 1 கப்
  • தண்ணீர் - 3/4 கப்
  • ஃபுட் கலர் - கால் தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
  • எண்ணெய் - பொரிப்பதற்கு போதுமானது
  • ஏலக்காய் தூள் - தேக்கரண்டி
  • உப்பு - 1 சிட்டிகை

தேன் மிட்டாய் செய்முறை:

  • முதலில், ஒரு அகல பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்க்கவும் (பேக்கிங் பவுடருக்கு பதிலாக பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம்)
  • இதனுடன் ஃபுட் கலர் சேர்த்து மாவை நன்கு கலந்து விடவும். பின்னர், மாவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு மென்மையாக பிசையுங்கள்
  • பிறகு, மாவில் எண்ணெய் தடவி சிறிது நேரம் மூடி வைத்துக்கொள்ளுங்கள்

இப்போது தேன் மிட்டாயிற்கு தேவையான கேரமில்-ஐ (சர்க்கரை பாகு) தயார் செய்து கொள்ளலாம்..

  • அதற்கு, அடுப்பில் ஒரு கடாயை வைத்து தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் சூடானதும் சர்க்கரை சேர்த்து நன்கு கரைக்கவும்.
  • (தேன் மிட்டாயிற்கு சர்க்கரை பாகு தண்ணீராக இருக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்) இப்போது சர்க்கரை கரைந்து, பாகு பதம் வைத்தவுடன் அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.

சுடச் சுடச் தேன் மிட்டாய்..

  • இப்போது, நாம் பிசைந்து வைத்துள்ள மாவுடன் சிறிது மைதா மாவு தூவி பெரிதாகவும் இல்லாமல், சிறிதாகவும் இல்லாமல் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
  • இதற்கிடையில், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • எண்ணெய் சூடான பின்னர், நாம் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை உடையாமல் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • இப்போது இந்த உருண்டைகளை நாம் தயார் செய்து வைத்துள்ள வெதுவெதுப்பான சர்க்கரை பாகில் போட்டு 15 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
  • 15 நிமிடங்களுக்கு பின்னர், அதை ஒரு தட்டிற்கு மாற்றி நன்கு காய்ந்ததும் சாப்பிட்டு பாருங்கள்...பல வருடங்களுக்கு முன் பெட்டிக்கடையில் இருந்த கண்ணாடி ஜாரில் இருந்து நாம் சாப்பிட்ட அதே சுவை நினைவிற்கு வந்து செல்லும்.
  • அப்புறம் என்ன? டக்குனு செய்து நண்பர்களுக்கு கொடுத்து சர்ப்ரைஸ் செய்யுங்கள்...

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details