ஹைதராபாத்:சர்வதேச அளவில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பல புள்ளி விவரங்கள் மற்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், 15 - 19 வயதுடைய வளரிளம் பெண்கள் தங்களது காதலர்கள் உள்ளிட்ட துணைகளால் உடல் மற்றும் பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாவதாக உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்ட தி லான்செட் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்கள் சுகாதாரம் என்ற புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இதில் சர்வதேச அளவில் 19 மில்லியன், அதாவது 24 சதவீத வளரிளம் பெண்கள் தங்களது துணைகளால் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், பொதுவாக 6-ல் ஒருவர் இத்தகைய பாதிப்பை தங்களது 20 வயதுக்குள் அனுபவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தங்களது துணைகளால் பாதிக்கப்படும் வளரிளம் பெண்கள் மனம் மற்றும் உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர்.
இதன்படி, வளரிளம் பெண்களின் ஆரோக்கியம், கல்வி, கல்வி அல்லது தொழில் சார்ந்த சாதனை, எதிர்கால உறவுகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் பிற வாய்ப்புகள் ஆகியவற்றை இழக்கின்றனர். அதேநேரம், துணைகளால் நேரும் வன்முறையால் உடலில் காயங்கள், மன அழுத்தம், கவலை, திட்டமிடப்படாத கர்ப்பம், பாலியல் உறவு சார்ந்த நோய்கள் ஆகியவற்றிற்கு உள்ளாவதகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.
வளரிளம் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள்: தங்களது சமூக வரையறை, பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு கூறுகளால் வளரிளம் பெண்கள் துணைகளால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன்படி, உலக அளவில் அதிகபட்சமாக ஒசானியாவில் 47 சதவீதம் மற்றும் மத்திய புற சஹாரான் ஆப்பிரிக்காவில் 40 சதவீதம் வளரிளம் பெண்களும் தங்களது துணைகளால் உடல் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகின்றனர். அதேநேரம், குறைந்தபட்சமாக மத்திய ஐரோப்பாவில் 10 சதவீதம் மற்றும் மத்திய ஆசியாவில் 11 சதவீதம் பேரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், குறைந்தபட்சம் 6 சதவீதம் வளரிளம் பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளரிளம் பெண்கள் வன்முறைக்கு உள்ளாவதன் முக்கிய காரணி என்ன?உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள், மாகாணங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகபட்சமாக வளரிளம் பெண்கள் இந்த வன்முறைக்கு உள்ளாவதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், உயர்நிலை பள்ளிப்படிப்பை முடிக்காமல் இருத்தல், சட்டரீதியாக சொத்துரிமை இல்லாமல் இருத்தல் என ஆண்களை விட பெண்கள் அனைத்து உரிமைகளிலும் குறைவாக இருக்கும்போது வளரிளம் பெண்கள் தங்கள் துணைகளால் இத்தகைய இன்னலுக்கு ஆளாகின்றனர்.