சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். தற்போது இவரது நடிப்பில், விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்கள் உருவாகி வருகின்றன. இதில் குட் பேட் அக்லி அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஆனால், விடாமுயற்சி படம் எப்போது வெளியாகும் என எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், விடாமுயற்சி படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இதில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வருவதால், நடிகர் அஜித் குமார் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்.
வழக்கமாக ஒரு படத்தை முடித்துவிட்டு தான் அஜித் குமார் தனது அடுத்த படத்தை தொடங்குவார். ஆனால், இம்முறை விடாமுயற்சி தாமதமாவதால் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.