கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் 8-வது மேற்கு வங்க உலகளாவிய வணிக உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மேற்கு வங்கத்தில் முதலீடு செய்வதாக அறிவித்தன. அதில் மிக முக்கியமானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகும். வரும் 10 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்ய விரும்புவதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
இந்த நிகழ்வில் பேசிய ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, "2016-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் குழுமம் ரூ.2000 கோடி முதலீடு செய்தது. இது தற்போது ரூ.50,000 கோடியாக உயர்த்தப்படவுள்ளது. இந்த புதிய முதலீடு பசுமை எரிசக்தி மற்றும் சில்லறை வர்த்தகம் உட்பட பல துறைகளில் பரவி, மாநிலத்தில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார்.
மேற்கு வங்க மாநிலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் முன்னணியில் இருப்பதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பாராட்டிய அவர், "மேற்கு வங்கத்தின் சொத்து அதன் மக்களும் அவர்களின் திறமைகளும் தான்" என்று கூறினார். மேலும் ரிலையன்ஸ் எப்போதும் மேற்கு வங்கத்தின் நம்பகமான பங்காளியாக இருக்கும் என்றும் கூறினார். "மேற்கு வங்கத்தின் அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய உண்மையான கூட்டாண்மையை உருவாக்குவதே இந்த முதலீடு. மேற்கு வங்கம் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. மேலும் 90 மில்லியனுக்கும் அதிகமான குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது" என்று அம்பானி கூறினார்.