டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம், நாளை (ஜன.22) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். இது மட்டுமல்லாது, மத்திய, மாநில அமைச்சர்கள், முதலமைச்சர்கள் உள்பட அரசியல் பிரமுகர்கள், திரைப்படப் பிரபலங்கள், வெளிநாட்டினர் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக அயோத்தி முழுவதும், துணை ராணுவம், காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு பொருட்களும் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், கங்கனா ரனாவத் உள்ளிட்டோரும் அயோத்தியை நோக்கிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் தினமான நாளை, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாஜகவினரால் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல், 'கோயில்களுக்கு வராதீர்கள்' என இந்துக்கள், அங்குள்ள மதச்சார்பற்ற அதிகாரிகளால் விரட்டப்படுவதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கோயில்கள் மட்டுமல்லாது, திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தனியார் இடங்கள், கோயில்களுக்கு வெளியே பொது இடங்களில் ராமர் படம் வைத்து வழிபடவும், அன்னதானம் வழங்கவும் ராம பக்தர்களும், பொதுமக்களும் ஏற்பாடு செய்துள்ளதாக தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வானதி சீனிவாசன், திமுக அரசின் கீழ் இயங்கும் காவல்துறை அவர்களை அழைத்து, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என மிரட்டியுள்ளதாகவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாக கண்டனம் தெரிவித்து இருந்தார்.