தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹரியானா, ஜம்மு - காஷ்மீரில் யார் ஆட்சி? - பரபரப்பான சூழலில் நாளை வாக்கு எண்ணிக்கை

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியும், ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

Updated : 4 hours ago

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits - ANI)

ஹைதராபாத்:ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்றும், ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் பணி நாளை காலை 8 மணி முதல் துவங்குகிறது. முற்பகல் 11 மணி அளவில் முன்னணி நிலவரம் மற்றும் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது குறித்து ஓரளவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி தனிப்பெரும்பான்மையை இழந்தது. இந்நிலையில், நாளை நடைபெறும் இரு மாநிலத் தேர்தல் முடிவில், கருத்துக்கணிப்புகள் உண்மையானால், அது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும்.

இதையும் படிங்க:2030-க்குள் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 30 கோடியாக உயரும்: மத்திய அமைச்சர் தகவல்

ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, மாநிலத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளுடன் தாங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹரியானாவில் 90 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அம்மாநிலத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் அமைதியாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 65.65 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

முக்கிய வேட்பாளர்கள்:குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள லட்வா தொகுதியில் பாஜக தலைவரும், தற்போதைய முதல்வருமான நயாப் சிங் சைனி களத்தில் உள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா, ரோத்தக் மாவட்டத்தில் உள்ள தனது பாரம்பரிய தொகுதியான கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் போட்டியில் உள்ளார்.

மல்யுத்த வீராங்கனையாக இருந்து அரசியல் களத்தில் குதித்த, வினேஷ் போகத், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். ஹிசார் தொகுதியில் பாஜக முன்னாள் தலைவர் சாவித்ரி ஜிண்டால் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். 'ஓ.பி.ஜிண்டால் குழுமத் தலைவரான சாவித்ரி ஜிண்டால், இந்தியாவின் பணக்கார பெண்மணி மற்றும் பாஜக எம்பி- நவீன் ஜிண்டாலின் தாயார் ஆவார். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.270 கோடியாகும். எனினும் ஹரியாணா தேர்தல் களத்தில் அவர் இரண்டாவது பெரிய பணக்கார வேட்பாளர் ஆவார்.

இந்திய தேசிய லோக் தளம் கட்சி (ஐஎன்எல்டி) நிறுவனரும், ஹரியானாவில் இரண்டு முறை முதலமைச்சராக பணியாற்றிவரும், முன்னாள் துணைப் பிரதமரான சவுத்ரி தேவி லாலின் குடும்பத்தைச் சேர்ந்த துஷ்யந்த் சவுதாலாவும் தேர்தல் களத்தில் உள்ளார். இவர், நான்காம் தலைமுறை அரசியல்வாதி ஆவார்.

ஜம்மு - காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மறுசீரமைப்புக்குப் பின்னர், 90 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி (என்சி) கூட்டணியாகவும், பாஜக மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் தேர்தலை சந்தித்துள்ளன. இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.

28 பெண் வேட்பாளர்கள் உட்பட 415 வேட்பாளர்களின் தலைவிதி நாளைய வாக்கு எண்ணிக்கையில் தீர்மானிக்கப்பட உள்ளது. முக்கியப் போட்டியாளராக காந்தெப்ரல் தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா போட்டியில் உள்ளார். பிஜ்பெஹாரா தொகுதியில் பிடிபி கட்சி சார்பில் இல்திஜா முஃப்தி களத்தில் உள்ளார். பாஜகவின் ரவீந்தர் ரெய்னா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.ஒய்.தாரிகாமி, அவாமி இத்தேஹாத் கட்சியின் ஷேக் குர்ஷித், ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் சஜாத் லோன், ஜம்மு - காஷ்மீர் அப்னி கட்சியின் (ஜேகேஏபி) சையது முகமது அல்தாப் புகாரி ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

இவர்கள் தவிர, நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் சகோதரர் ஐஜாஸ் அகமது குரு, சோபோர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். பாரமுல்லா தொகுதியில் முசாபர் உசேன் பெய்க் சுயேச்சையாக போட்டியில் உள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : 4 hours ago

ABOUT THE AUTHOR

...view details