'தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் எடுக்க அனுமதிக்கவும்' - பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்
🎬 Watch Now: Feature Video

தூத்துக்குடி: கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஆலையைத் திறக்க பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கையை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து ஆலையைத் திறக்க ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் முதற்கட்டமாக ஆலையிலிருந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றவும், ஆலையில் உள்ள பசுமை வளாகத்தைப் பராமரிக்கவும், வேறு கழிவுகள் இருந்தால் அகற்றவும் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் இந்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி, மாவட்ட நிர்வாகம் இந்த பணிகளை மேற்கொள்ள உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, இன்று (ஏப்.24) குமாரரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், காயலூரணி, சாமிநத்தம், சில்லாநத்தம், ராஜாவின்கோவில், மீளவிட்டான், மடத்தூர், வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி உள்ளிட்ட 21 கிராமங்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
கோரம்பள்ளத்திருந்து சேவை ரோடு வழியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தவர்களை காவல்துறையினர் ஊர்வலமாக சென்று மனு அளிக்கக்கூடாது என தடுத்து நிறுத்தினர். இதனிடையே ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகன் என்பரவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஸ்டெர்லைட் ஆலையினால் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சார்ந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும்; ஸ்டெர்லைட் ஆலையானது தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
அந்நிய சக்திகளிடமிருந்து சில போராளிகள் பணம் பெற்றுக்கொண்டு போராட்டம் நடத்தியதன் விளைவாகவே, காப்பர் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நாடு தற்போது பிற நாடுகளிடமிருந்து அவற்றை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் எதிராகப் போராட்டம் நடத்துவதாக எண்ணிக்கொண்டு போராட்டக்காரர்கள் இந்த நாட்டின் நலனுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்றும்; இந்த ஆலையால் எந்த கிராமத்திற்கும் பாதிப்பும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு போராட்டம் நடத்தியவர்கள் தங்களது சுய நலனுக்காகவே போராட்டம் நடத்துகிறார்கள் என்று கூறிய அவர், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து உச்ச நீதிமன்றம் கூறியுள்ளபடி பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகமும் மத்திய, மாநில அரசுகளும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனையடுத்து ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒரு சில பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையினை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதையும் படிங்க: G Square IT Raid: ஜி ஸ்கொயர் நிறுவனம், திமுக எம்.எல்.ஏ வீட்டில் ஐடி ரெய்டு!