Published : Sep 29, 2023, 7:29 AM IST
Karnataka Bandh: கர்நாடகாவில் இன்று பந்த்.. தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கம்!
ஓசூர்: காவிரி விவகாரத்தில் கார்நாடகவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க உத்தரவிட்ட காவிரி நதிநீர் பங்கீட்டு குழு, தமிழ்நாடு அரசை கண்டித்து கர்நாடகாவில் பல்வேறு அமைப்பினர் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த செவ்வாயன்று(செப்.26) பெங்களூருவில் முழு அடைப்பு நடைபெற்ற நிலையில், இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதனிடையே தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்லும் பேருந்துகளை அம்மாநில எல்லை பகுதி வரை மட்டுமே இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பெங்களுரூ, ஆனேக்கல், மாலூர், கேஜிஎப் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஓசூர் வழியாக இயக்கப்பட்டு வந்த 430 பேருந்துகள் இரவு 9 மணியுடன் நிறுத்தப்பட்டன. மேலும் கர்நாடகா மாநிலத்திற்கு சென்ற அனைத்து தமிழக பேருந்துகளும் நேற்று இரவே தமிழகம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.