Published : Dec 2, 2023, 12:18 PM IST
"மக்களவைத் தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கும் கட்சியாக அதிமுக இருக்கும்" - மாஜி அமைச்சர் செங்கோட்டையன்!
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் அதிமுக பூக் கமிட்டி கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நேற்று (டிச.01) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுகவைக் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவினர் இணைந்தனர். அதிமுகவில் இணைந்த தொண்டர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், "அனைவரையும் அரணைத்து செல்லும் இயக்கமாக அதிமுக உள்ளது. அனைத்து மக்களையும் போற்றி புகழ்வதற்கும் வாழ்வதற்கும் அதிமுக இயக்கம் துணை நிற்கும். அதிமுக எம்மதமும் சம்மதமும் என்ற முறையில் தான் இயங்கி வருகிறது. எல்லோரையும் வாழ வைத்து, அரவணைத்து செல்லக்கூடிய இயக்கமாக அதிமுக திகழ்கிறது.
மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதமரை நிர்ணயிக்கும் முக்கிய கட்சியாக அதிமுக திகழும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இதன் எதிரொலியாக தாளவாடியில் திமுகவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஆட்சி அதிகாரம் திமுக கையில் உள்ளது. ஆனால் திமுகவினர் அதிமுகவில் இணைவதை பார்க்கும்போது மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்” என்றார்.