அமெரிக்க நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ள வழிகாட்டுதல்களின்படி, தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மற்ற தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் வீடுகளுக்கு முகக்கவசம் அணியாமல் செல்லலாம்.
ஆறு அடி இடைவெளி இல்லாமலும் இருக்கலாம்.
கடுமையான நோய்களால் பாதிக்கப்படாத, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களின் வீடுகளுக்கும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் செல்லலாம்.
தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருக்கும் முழுமையான தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள், அறிகுறி இல்லாமல் இருந்தால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் கரோனா தொற்று பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் யார்?
தடுப்பூசியின் கடைசி டோஸ் செலுத்திக்கொண்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நபரே முழுவதுமாக தடுப்பூசி செலுத்திகொண்டவர் ஆவார் என அமெரிக்க நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விளக்கம் அளித்துள்ளது.
"தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் வீட்டில் என்னென்ன வேலைகளை செய்துகொள்ளலாம் எனவும், சில வழிகாட்டுதல்கள் கூறப்பட்டுள்ளன. முழுவதுமாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்கூட பொது இடங்களில் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்" என்கிறார் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் ரோஷெல் வாலென்ஸ்கி.
"அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருவதால் அவர்களுக்கான வழிகாட்டுதல்களையும், அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தி வருகிறோம்" என்கிறார் ரோஷெல்.
முழுவதுமாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அறிகுறியற்ற தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும். அதனால் அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் மிகவும் குறைவாக உள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடமிருந்து (FDA) கிடைக்கும் தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மிக விரைவில் தொற்றை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
அமெரிக்காவில், அவசரகால பயன்பாட்டிற்கு தற்போது மூன்று தடுப்பூசிகள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி, 2020ஆம் ஆண்டு மாடர்னா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தடுப்பூசி ஆகிய தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம். கடந்த பிப்ரவரி மாதம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் புற்றுநோயாளிகளுக்கு உதவிய 'டெலி கவுன்சிலிங்'