''சுழன்றும் ஏர்பின்னது உலகம்" எனும் வள்ளுவரின் வாக்கைப் போல உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் உணவிற்காக விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறது.
அதனை ஊரடங்கு தெளிவாக புரியவைத்து விட்டது. கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டன.
அதையடுத்து தற்போது தளர்வுகளின் அடிப்படையில் நிபந்தனைகளுடனும் கட்டுப்பாடுகளுடனும் செயல்படத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் பலர் தற்சார்பு தொழில்களுக்கும் விவசாயத்திற்கும் திரும்பி வருகின்றனர். அதனால் விவாசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், உதவும் வகையிலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மென்பொறியாளர் ஒருவர் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலங்களை இலவசமாக உழது கொடுத்திருக்கிறார். இன்னும் உழவு செய்து கொடுத்தும் வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மேலத்துலுக்கன் குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். மென்பொறியாளரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஊரடங்கினால் சொந்த ஊர் திரும்பிய அவர் வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியாற்றி வருகிறார்.
விவசாயப் குடும்பத்தில் பிறந்த இவருக்கு, விவசாயத்தின் மீது அதிக அக்கறை உண்டு. அதனால் அவர் பருவமழைக் காலமான தற்போது உழவு செய்ய பணமில்லாத விவசாயிகளின் நிலங்களுக்கு தான் வைத்திருக்கும் டிராக்டர் மூலம் இலவசமாக உழவு செய்துகொடுத்துவருகிறார்.
அதன்படி அவர் தனது கிராமத்தைச் சுற்றியுள்ள சுமார் மூன்று ஆயிரம் விவசாயிகளின் ஏழு ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளை நிலங்களுக்கு இலவசமாக உழவு செய்து கொடுத்துள்ளார்.
அதை தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் காரணமாக தனது கிராம மக்களை பாதுகாக்கும் உன்னத நோக்குடன், தென்கொரியா, இந்தியாவில் திராட்சை தோட்டங்களில் மருந்து தெளிக்க பயன்படுத்தும் நவீன எந்திரத்தைப் பயன்படுத்தி, அதனை டிராக்டரில் பொருத்தி சுற்றுவட்டார பகுதி ஊராட்சிகளில் அரசு பயன்படுத்தும் கிருமி நாசினியை இலவசமாக தெளித்து வ௫கிறார்.
அதன்படி பேராலி, மல்லாங்கிணறு, துலுக்கன் குளம், கல்குறிச்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் தினமும் கிருமி நாசினி தெளித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எங்கள் கிராமங்களில் கரோனா பரவல் இல்லை என்றாலும் "வரும் முன் காப்போம்" எனும் எச்சரிக்கை நடவடிக்கையாக நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளித்துகிறேன். அதற்கு டாபே டிராக்டர் நிறுவனம் உதவி செய்து வருகிறது. கிருமிநாசினிகள் தவிர மற்ற செலவுகள் அனைத்தும் எனது நண்பர்கள் மூலம் திரட்டி இப்பணியை செய்து வருகிறேன்" எனத் தெரிவித்தார்.
மென்பொறியாளராக இருந்து கொண்டு வருமானத்திற்கு குறையில்லாத நிலையில், மனிதனுக்கு அடிப்படை விவசாயம், அதனால் விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்கும் வகையிலும், தனது ஊரில் கரோனா பரவக்கூடாது என கிருமிநாசினி தெளித்து சேவை செய்து வரும் அவரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஒதுக்கினாலும் உங்களுக்காக உழைப்பேன்' - பெருமை கொள்ளும் ஆம்புலன்ஸ் பணியாளர்