திருநெல்வேலி: விருதுநகர் மாவட்டம் ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 20க்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரிக்குச் சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் விருதுநகர் திரும்பிக்கொண்டிருந்தனர். பேருந்தை ஓட்டுநர் முனுசாமி இயக்கினார். திருநெல்வேலி டிவிஎஸ் நகர் நான்கு வழி சாலை அருகே பேருந்து சென்ற போது ரயில் உதிரிப் பாகங்களை ஏற்றிக் கொண்டு குஜராத் சென்றுக் கொண்டிருந்த கனரக வாகனம் டீசல் இல்லாமல் நடுரோட்டில் நின்று விட்டது.
சாலை விதிகளை மீறி எவ்வித எச்சரிக்கை விளக்குகளும் போடப்படாமல் சாலையின் நடுவே லாரி நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முனுசாமி ஓட்டிவந்த கல்லூரி மாணவிகள் வந்த சுற்றுலா பேருந்து லாரியின் பின் பக்கத்தில் அதிவேகமாக மோதியது. இந்த திடீர் விபத்தால் மாணவிகள் அலறினர். பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் முனுசாமி, பேருந்து கிளீனர் வீர செல்வம், மாணவிகள் அன்னை தெரசா, ரஞ்சிதா, சசிகலா, பொன்மலர், சாந்தி உட்பட 15க்கும் பேருக்குக் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாகப் படுகாயமடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டீசல் இல்லாமல் பழுதான லாாியை நான்கு வழிச்சாலையில் எந்தவித எச்சரிக்கை விளக்கும் போடாமல், அடையாளமும் வைக்காமல் விபத்து ஏற்படுத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.