விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலராக துரை பிருதிவிராஜ் பணியாற்றி வருகிறார். இவர், ராஜேஷ் உதவும் கரங்கள் அறக்கட்டளை மற்றும் அப்துல் கலாம் நினைவு இல்லம் ஆகியவற்றில் கட்டணமில்லா மருத்துவ அவசர ஊர்தி இயக்கி வருகிறார். இதன் மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பலர் பயன் பெற்று வருகின்றனர்.
மேலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்களின் உதவியுடன் கல்வி உதவித்தொகை கொடுத்து வருகிறார். ஏற்கனவே, இவர் கரோனா காலத்தில் சிறந்த முன் களப்பணியாளர் என்ற விருதை தமிழ்நாடு முதலமைச்சரிடம் சுதந்திர தினத்தன்று பெற்றார். அதைத்தொடர்ந்து ஆட்சியரிடம் சிறந்த முன் களப்பணியாளர் என பாராட்டும் பெற்றார்.
இவருடைய சேவையையும் உதவி மனப்பான்மையையும் கஞ்சநாயக்கன்பட்டி பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இவரது சமூக சேவையை பாராட்டி சோழர் உலக சாதனை புத்தகம் நிறுவனத்தால் சமூக சேவைக்கான நற்சான்றிதழ் மற்றும் சோழன் சேவை செம்மல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.