விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஒரு மாதத்துக்கு முன்பு ஜவுளி தொழிலாளிகள் மும்பையில் தொழில் செய்வதற்காக சென்றுள்ளனர். இதையடுத்து, கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்த தொழிலாளிகள் வேலை இல்லாமல் மிகவும் சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் சொந்த ஊர்களுக்கு வர பேருந்து இல்லாமலும், உணவு கிடைக்காமலும் அங்கு தவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு திரும்ப முடியாமல் இருக்கும் அவர்கள், தங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் விமானம் மூலம் அரசு சார்பில் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இடம்பெயர்ந்து பணியற்றி வரும் தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு உரிய போக்குவரத்து வசதி இல்லாமல் கால்நடையாகவே சென்று வருகின்றனர்.
இதையடுத்து பிற மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறு அந்தந்த மாநில அரசுகளுக்கு தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.