திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் குருநாதன்(54). இவரது மகள் மனிஷாஸ்ரீ(23), குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து சென்னையில் கவுன்சிலிங் நடந்துள்ளது. இந்த கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள தனது தந்தை குருநாதன் மற்றும் அக்காவின் கணவர் அய்யனார் ஆகியோருடன் சென்னை சென்று விட்டு நேற்று முன்தினம் (டிசம்பர் 1) மாலை சென்னை - செங்கோட்டை சிறப்பு ரயிலில் ஏறி பயணம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில்,சிறப்பு ரயில் நேற்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோப்பையநாயக்கர்பட்டி அருகே வரும் போது தனது இருக்கையில் இருந்து எழுந்த மனிஷாஸ்ரீ காற்று வாங்குவதற்காக படிக்கட்டு அருகே வந்து நின்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ரயிலிலிருந்து தவறி விழுந்துள்ளார்.
மணிஷாஸ்ரீ விழுந்தது தெரியாமல் தந்தை குருநாதன் மற்றும் மாமா அய்யனார் ஆகியோர் ரயிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ரயிலானது சங்கரன்கோவில் வந்தவுடன் மனிஷாஸ்ரீயை தேடியுள்ளனர். இருக்கையில் மனிஷாஸ்ரீ இல்லாததால் அதிர்ச்சி அடைந்து ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல் துறையினர் தண்டவாளப் பகுதியில் சோதனைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோப்பைநாயக்கர்பட்டி அருகே உள்ள தண்டவாளப்பகுதியில் மனிஷாஸ்ரீ சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, மனிஷாஸ்ரீக்கு கவுன்சிலிங்கில் ஊரக மருந்துவத்துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணி கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்த நிலையில், ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது அவரின் குடும்பத்தினரிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.