விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள புல்வாய்பட்டி கிராமத்தில் கஞ்சம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டுவருகிறது. இதன் அருகில் கூட்டுறவு பண்டகசாலை உள்ளது. இன்று இரண்டாம் சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை அருகிலுள்ள பண்டகசாலை விற்பனையாளர் காலையில் கடையைத் திறக்கும் பொழுது அருகிலிருந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வங்கியின் செயலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே விரைந்துவந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர் சுப்பாராஜ், வங்கியின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்துவந்த சாத்தூர் தாலுகா காவல் துறையினர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்துவருகின்றனர். வங்கியின் கதவை உடைத்து உள்ளே சென்று வங்கியில் உள்ள லாக்கரை உடைக்க முற்பட்டபோது உடைக்க முடியாததால் திருடர்களின் திருட்டு முயற்சி தோல்வியில் முடிந்தது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வங்கியில் திருட வந்தவர்கள் வங்கியிலிருந்த அபாய அலாரம் அடிக்கும் சத்தம் கேட்காமல் இருக்க ஒலிபெருக்கியில் மைதா மாவு கொண்டு அடைத்துவிட்டு திருட முயற்சி செய்துள்ளனர். திருட்டு முயற்சி தோல்வியில் முடிந்ததால் கிராம மக்கள் விவசாயக் கடனுக்காக அடமானம் வைத்திருந்த சுமார் இரண்டு கோடி மதிப்புள்ள நகைகள், வங்கியிலிருந்த பணம் ஆகியவை தப்பியது. விசாரணையின் அடுத்தகட்டமாக மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து தடையம் மற்றும் கைரேகை பதிவுகள் ஏதும் உள்ளனவா என்று சோதனை செய்தனர். வங்கியின் வாசலில் உள்ள சிசிடிவியில் ஏதும் பதிவுகள் உள்ளதா என்பது பற்றியும் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும் குற்றச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சாத்தூர் தாலுகா காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை பணம் திருட்டு!