விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதுகுடி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜலிங்கம். இவர் புதிய தமிழகம் கட்சியில் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார்.
இதனிடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தேசிகாபுரத்தில் நடந்த கொலையில் தங்கவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜலிங்கம் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றைய முன்தினம் ராஜலிங்கம் தனது தோட்டத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்ட போது, அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டு உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ய்யப்பட்டு இரண்டு நாள்களாக வாங்கப்படாமல் உள்ளது. உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கடந்த மூன்று தினங்களாக ராஜபாளையம் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையை முதுகுடி பகுதியில் அப்பகுதி மக்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ராஜபாளையம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்த நிலையில், ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 3 துணை காவல் கண்காணிப்பாளர், 2 உதவி காவல் கண்காணிப்பாளர் உள்பட 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கலவரம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் காவல்துறையினர் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 10 பேரிடம் காவல்துறையினர் தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்த புதிய தமிழகம் கட்சியினர் கடைகளை அடைக்க வலியுறுத்தியும் இருசக்கர வாகனங்களை கீழே தள்ளி சேதப்படுத்தியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து சென்னை நீதிமன்றத்தில் 3 பேர் ஆஜராகி உள்ளனர் என காவல் துறையினர் கொடுத்த தகவலையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இருப்பினும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை உடலை வாங்க போவது இல்லை எனக்கூறி முதுகுடி பகுதியில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மொட்டை மாடியில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார் கைது