தமிழ்நாடு முழுவதும் வருகிற 27ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், விருதுநகஎர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இந்த பரப்புரை முதலாவதாக வெற்றிலையூரணியில் ஆரம்பித்து தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், மீனாட்சிபுரம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பொதுமக்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சியில் நல்லாட்சி தொடர்ந்திட தொடர்ந்து அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றும், உங்கள் குறைகள் தீர்ந்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் எனவும் கோரிக்கை வைத்தார்.
மேலும், விருதுநகர் மாவட்டத்தின் முதுகெலும்பாக உள்ள பட்டாசுத் தொழிலுக்கு பிரச்னை வந்தபோது அதற்கு உடனடி தீர்வு கண்டு, பட்டாசு தொழிலை பாதுகாத்தது அதிமுக அரசுதான் எனவும் அமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க: 'குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வதந்தியைப் பரப்புவது தீவிரவாத செயல்' - ராஜேந்திர பாலாஜி