காரியாபட்டியில் சிறுத்தை நடமாட்டம் - தேடும் பணியில் வனத்துறையினர்! - viruthunagar district news
விருதுநகர்: காரியாபட்டி அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அல்லிக்குளம், கிழவனேரி கிராம பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாக சிறுத்தை நடமாடுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து நேற்றிரவு அல்லிக்குளம் பகுதிகளில் வீடுகளில் இருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என வருவாய்துறையினர் அறிவிப்பு வெளியிட்டனர்.
அதனடிப்படையில் இன்று (ஏப்.8) அல்லிக்குளம், கிழவனேரி கிராம பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், காட்டுப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வத்திராயிருப்பு வனசரகர் கோவிந்தன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், காவல்துறையினர் சிறுத்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுத்தை நடமாடும் அச்சத்தால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக நடமாட வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.