விருதுநகர் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிவருபவர் பிரிதிவிராஜ். இவர், கிராம நிர்வாக அலுவலராக சிறப்பாக பணியாற்றுவது மட்டுமல்லாமல், சமூகத்திற்காக பல்வேறு சேவைகளையும் தனது நண்பர்களுடன் இணைந்து செய்து வருகிறார்.
குறிப்பாக, குருதிக்கொடை, ஏழை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவது, ஆதரவற்ற மனநல வளர்ச்சிக் குறைந்த குழந்தைகளை வளர்ப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார். வாகன விபத்தில் இறந்த தனது தம்பியின் நினைவாக அவசர ஊர்தியை எந்த ஒரு கட்டணமும் வசூலிக்காமல் தன்னார்வலர்களின் உதவியோடு இயக்கிவருகிறார்.
தனது ஊதியத்தின் ஒரு பகுதியை இதற்காகவே சேமித்து முதலில் சிறிய அளவில் தொடங்கிய இச்சேவை, சமூகவலைதள நண்பர்களின் உதவியோடு தற்போது பெரியளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சமூகவலைதள நண்பர்களின் உதவியோடு கலாம் என்ற ஓர் இல்லத்தை தொடங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையிலுள்ள பள்ளி மாணவர்களைக் கண்டறிந்து பள்ளிக்கட்டணம் செலுத்தி வருகிறார். கடந்த கல்வியாண்டில் இவர் மூலம் 69 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்தனை சேவைகளைச் செய்துவரும் இவர், தனது கிராம நிர்வாக அலுவலர் பணியையும் சிறப்பாகவே செய்துவருகிறார்.
'லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' என்ற வாசகத்தை தமது பணிபுரியும் அலுவலகத்தில் எழுதிவைத்திருக்கும் இவர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் தமது அலுவலகம் வந்துசெல்லும் அலைச்சலைத் தவிர்க்க அவர்களது வீடுகளுக்கே தேடிச்சென்று தேவையான சான்றிதழை வழங்கி வருகிறார்.
கிராம நிர்வாக அலுவலராக தனது பணியினை மட்டும் மேற்கொள்ளாது, தான் வளர்ந்து வந்த இச்சமூகத்திற்கு சேவையாற்றவேண்டும் என நல்லெண்ணெத்தோடு செயல்படும் பிரிதிவிராஜ், பல இளைஞர்களுக்கும், அரசு துறையில் மற்ற ஊழியர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என்றால் மிகையாகாது.
இதையும் படிங்க: ஊரடங்கால் முடங்காமல் மாற்றுத் தொழிலில் இறங்கிய சிவகாசி தொழிலதிபர்!