நேற்றைய தினம் (டிச,4) சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட 7 சாதி உட்பிரிவுகளை ஒன்றிணைத்து வேளாளர் என அரசாணை வெளியிட மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக அறிவித்தார். இதனைக் கண்டித்து வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோர் இன்று விருதுநகரில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், முதலமைச்சரின் உருவ பொம்மையும் எரித்தனர்.
இதையடுத்து அவர்களைக் கைது செய்த காவல் துறையினர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். தகவலறிந்து அங்கு வந்த அதிமுக நகரச் செயலர் நைனார், ஒன்றியச் செயலர்கள் கண்ணன், தர்மலிங்கம், அதிமுகவைச் சேர்ந்த கோகுலம் தங்கராஜ் உள்பட ஏராளமானோர் திருமண மண்டபம் முன் திரண்டனர். மண்டபத்தின் மீது கற்களை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து அதே இடத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் மறியல் முடிவுக்கு வராததையொட்டி, அவர்களை கைது செய்தனர்.