தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கினை முன்னிட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் வண்ணம், 2 ஏக்கருக்கு குறைவாக உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு இலவசமாக கோடை உழவு செய்து தர தமிழ்நாடு வேளாண்துறையும்,
டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான டாபேயும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் உத்தண்ட ராமன்
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் மேலதுலுக்கன் குளம் கிராமத்தில் இந்த திட்டத்தை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் உத்தண்ட ராமன் தொடங்கி வைத்தார். ஒரே நேரத்தில் ஆறு டிராக்டர்களைக் கொண்டு நவீன முறையில் கோடை உழவு பணி தொடங்கி வைக்கப்பட்டது.
இலவச கோடை உழவுப்பணியை ஏற்பாடு செய்த தன்னார்வலர் கிருஷ்ணகுமார் தெரிவிக்கையில், “கரோனா ஊரடங்கு காலத்தில் எவ்வித வருமானமும் இல்லாமல் உழவு பணிகூட செய்ய முடியாமல் இருக்கும் விவசாயிகளுக்கு உதவும் விதமாக அரசும், இந்த டிராக்டர் நிறுவனமும் இணைந்து இப்பணியைச் செய்கிறன.
கடந்தாண்டு மாவட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் இலவசமாக உழுது கொடுத்துள்ளோம். நடப்பாண்டு 50 டிராக்டர்கள் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் உழுது கொடுக்க இருக்கிறோம்.
7 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர்.
இதன் மூலம் 7 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறவுள்ளனர். இலவச கோடை உழவு வேண்டும் விவசாயிகள், 1800 4200 100 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு பேசி பதிவு செய்துகொண்டால் இரண்டு நாள்களில் அவர்களின் நிலம் உழவு செய்து கொடுக்கப்படும்” என்றார்.