விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே சிறுவந்தாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராமன் மகள் சரண்யா (31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் கலாநிதி என்பவருக்கும் 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து கலாநிதி, அவரது தந்தை கண்ணன், தாயார் வசந்தா ஆகியோர் அடிக்கடி சரண்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி கொச்சைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த சரண்யா தனது தாய் வீட்டில் வசித்துவந்தார்.
நேற்று (ஆக.18) சரண்யாவின் வீட்டிற்கு கலாநிதி குழந்தைகளுடன் வந்து, மீண்டும் சண்டையிட்டு தகாத வார்த்தைகளில் திட்டிச் சென்றார்.
தொடர் கொடுமைகளையும், அவச்சொற்களையும் தாங்கமுடியாமல் மனமுடைந்த சரண்யா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு நெருப்பைப் பற்றவைத்து தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சரண்யா மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வளவனூர் காவல் துறையினர் கலாநிதி, அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தேனி அருகே வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது