விழுப்புரம், கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகம் பைபாஸ் சாலையில் நேற்று இரவு கொல்கத்தாவிலிருந்து சனல்நார் ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கிச் சென்ற லாரியும் கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசு பேருந்தும் நேருக்குநேர் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த நாமக்கல்லை சேர்ந்த ராஜு பலத்த அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். லாரியில் படுத்து உறங்கிக் கொண்டு வந்த கூடுதல் டிரைவர், துறையூரை சேர்ந்த தர்மலிங்கம்(46) என்பவர் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சொகுசுப் பேருந்து ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த 35 பேரில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தியாகதுருகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.