விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயக்கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாத நேரத்திலும் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி அதிகளவில் மிளகாய் பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் பச்சை மிளகாய் புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆனால், தற்போது கரோனா பாதிப்பின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில், தற்போது பச்சை மிளகாய் விளைச்சல் அதிகரித்தும், அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மொத்த கொள்முதல் விலையாக ஒரு கிலோ பச்சை மிளகாய் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியை ஈடுகட்ட முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் சோகத்தில் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
திண்டிவனம் சுற்றுவட்டார கிராமங்களான எண்டியூர், ஆவனிப்பூர், ஒலக்கூர், குருவம்மாபேட்டை போன்ற பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்திலும் ஏப்ரல், மே மாதங்களில் பச்சை மிளகாய் கிலோ 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு ஓரளவுக்கு விலை கிடைக்கும் என நினைத்து ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டிருந்தனர்.
ஆனால், இந்தாண்டு கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, பச்சை மிளகாய்க்கு உரிய விலை இல்லாமல் கிலோ 7 ரூபாய் முதல் 10 ரூபாய் என்ற விலையில் விவசாயிகளிடமிருந்து வாங்கி சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, "கரோனா ஊரடங்கு காரணமாக பச்சை மிளகாய் கிலோ 3 ரூபாய் முதல் 4 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை நடைபெறுகிறது. மேலும், ஊரடங்கு காரணமாக பச்சை மிளகாய் வாங்குவதற்கு யாரும் வருவதில்லை" என வேதனைத் தெரிவித்தனர்.
மேலும், விவசாயிகள் தங்களது பச்சை மிளகாயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். தற்போது ஏற்பட்ட விலை வீழ்ச்சியால் வாழ்வாதாரம் நடத்துவதற்கு மிகவும் கடினமாக இருப்பதாகவும் பச்சை மிளகாய் விவசாயத்தில் செலுத்திய தொகையை மீண்டும், அதனை பெறுவதற்கான வழி இல்லாததால் கடன் சுமையில் விழுந்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனைத் தெரிவித்தனர்.