விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 1,957 வாக்குச்சாவடி மையங்களில் புதியதாக வாக்களர்களின் பெயரை சேர்க்கவும் நீக்கவும் இன்று மற்றும் நாளை (டிசம்பர் 12, 13) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்படி விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தொடங்கிவைத்தார். பின்னர் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், விழுப்புரம் நகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள் படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, வெளிநாட்டில் வசிப்பவர்கள் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6ஏ, பெயர், வயது, பாலினம், உறவுமுறை ஆகிய பதிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள படிவம் 8 ஆகிய படிவங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்குள்ளேயே வாக்காளர்களின் வசிப்பிடம் மாறியிருந்தால் 8ஏ படிவத்தை பயன்படுத்த வேண்டும். விழுப்புரத்திலுள்ள ஏழு தொகுதி வாக்குச் சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு