விழுப்புரம் சேக்ரட் கார்ட் தனியார் பள்ளியில் தடுப்பு சிறப்பு முகாமில் பள்ளி மாணவ மாணவிகளுக்குத் தடுப்பூசி திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், " 12 லட்சத்து 23 ஆயிரத்து 543 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு என்றார்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசி செலுத்துவதைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். விழுப்புரத்தைப் பொறுத்தவரை கடந்த ஓராண்டில் ஏராளமான மருத்துவ நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இரண்டு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரிக்கை வைத்தார். அதன்படி ஐம்பத்தி ஒன்பது கோடியே ஒரு லட்சம் செலவில் தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல திண்டிவனம் அரசு மருத்துவமனை 42 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
உலகமே பேரிடரை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கொண்டு வந்து 66 லட்சம் பேருக்கு வீட்டுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் முறையை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தினார்"என்று தெரிவித்துள்ளார்.
இதில், அமைச்சர் பொன்முடி, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் மோகன், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.