விழுப்புரம் மாவட்டத்தில் நல்லகண்ணு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆட்சி, அதிகாரத்தை தக்கவைக்கவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. மத்திய அரசின் பிற்போக்குத் தன்மையை முறியடிக்கவே திமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இடதுசாரிகள் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ளது. மத்திய-மாநில அரசுகள் அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றிபெற திட்டமிட்டுள்ளது. திமுகவின் வெற்றியை தடுக்கவே திட்டமிட்டு வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது. மத்திய அரசின் முகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
பாஜக இந்திய குடியரசு சட்டத்துக்கு புறம்பான கட்சி. தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும் என்ற அக்கறை மத்திய அரசுக்கு இல்லை. மத அடிப்படையில் மக்களை பிரித்து வைக்க வேண்டும் என பாஜக அரசு நினைக்கிறது. அவற்றை எதிர்த்து முறியடிப்பது நமது கடமை. மக்களுக்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
ஐந்து ஆண்டுகால மோடி ஆட்சியில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு இந்தத் தேர்தலில் முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
![விழுப்புரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/tn-vpm-2-4-nallakannu-press-meet-photo-7205809_04042019213530_0404f_02696_444.jpg)