விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவில் கலந்துகொள்வதற்காக நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வந்துள்ளனர். திருநங்கைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், நேற்று (ஏப்.18) தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பின் சார்பில் மிஸ் கூவாகம் 2022 அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்று சென்னையைச் சேர்ந்த திருநங்கை மெகந்தி வெற்றி பெற்று மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார்.
திருச்சியைச் சேர்ந்த திருநங்கை ரியானா சூரி 2ஆம் இடத்தையும், சேலத்தைச் சேர்ந்த திருநங்கை சாக்ஷி சுவீட்டி 3ஆம் இடத்தையும் பிடித்தனர். முதல் இடம் பிடித்த மெகந்தி கூறுகையில், "வளர்ந்து வரும் திருநங்கைகள் முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
பெற்றோரின் ஒத்துழைப்பை பெறுவது முக்கியம். நான் ஒரு விமான பணிப்பெண்ணாக ஆசை. வாய்ப்பு அமைந்தால் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்வேன்" என்றார். தொடர்ந்து 2ஆம் இடம் பிடித்த ரியானா சூரி கூறுகையில், "நான் ஒரு சக போட்டியாளராக கலந்து கொண்டேன்.
இரண்டாம் பரிசு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி எனக்குள் புது தன்னம்பிக்கையை உருவாக்கி உள்ளது" என்று கூறினார். 3ஆம் இடம் பெற்ற சாக்ஷி சுவீட்டி பேசுகையில், "இது நான் கலந்து கொள்ளும் முதல் போட்டி.
மூன்றாம் பரிசு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரைக்காட்டிலும் தற்போது திருநங்கைகள் ஒரு படி மேலே உள்ளனர். யாரும் யாருக்கு சளைத்தவர்கள் இல்லை. திருநங்கைகள் கல்வியை முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள்.
கல்வி கற்றால் திருநங்கைகளால் அனைத்து துறையிலும் சாதிக்க முடியும். பெற்றோரிடம் உரிய அனுமதி பெறாமல் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். தாங்கள் ஒரு திருநங்கை என பெற்றோருக்கு தெளிவுபடுத்துங்கள்.
கல்வி கற்காத சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள், இதனை தவிர்த்துவிடுங்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை மெகந்தி 'மிஸ்' கூவாகமாக தேர்வு