கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 22 முதல் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 23 நபர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,922 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் கரோனா தொற்று சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 26 பேருக்கு கரோனா பாதிப்பில்லை என்று கூறி சுகாதாரத் துறை அலுவலர்கள் கடந்த 7ஆம் தேதி அவர்களை விடுவித்தனர். ஆனால், மறுநாள் வெளியான ரத்த பரிசோதனையின் முடிவில் விடுவிக்கப்பட்ட 26 பேரில் நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, விடுவிக்கப்பட்ட நால்வரில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த மூன்று நபர்களை அலுவலர்கள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்களுள் ஒருவரான டெல்லியைச் சேர்ந்த நிதின் இளைஞர் மட்டும் தலைமறைவானார். இதையடுத்து ஏழு தனிப்படைகள் அமைத்து விழுப்புரம் காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.
மேலும், உளுந்தூர்பேட்டை முதல் சென்னை வரையுள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் போஸ்டர்கள் அடித்து ஒட்டியிருந்தனர். இந்நிலையில் அவர் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் உள்ள லாரி ஷெட்டில் இருப்பதாக லாரி ஓட்டுநர் பூதபாண்டி என்பவர் மூலம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து வாட்ஸ்-ஆப் மூலம் அவரின் புகைப்படத்தை உறுதிபடுத்திக்கொண்ட காவல் துறையினர், உடனடியாக படாளம் பகுதிக்கு விரைந்து அவரை விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மேலும் அவருடன் இருந்த 4 பேர் கரோனா தொற்று சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தகவல் கொடுத்த லாரி ஓட்டுநர் பூதபாண்டிக்கு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ரூ.1000 பரிசு வழங்கினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சருக்கும் விஜயபாஸ்கருக்கும் பனிப்போரா?