விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா நோய் கிருமியின் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தனி சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளதையும், விழுப்புரம்-புதுச்சேரி எல்லைக்குட்பட்ட பொம்மையார்பாளையம் பகுதியில் கரோனா நோய் கிருமி முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மருத்துவப் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளதையும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் ஆரோவில் பகுதியில் அதன் நிர்வாகத்தினரிடம் கரோனா நோய்க் கிருமியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் தலைமையேற்று ஆலோசனைகளை வழங்கினர்.
கரோனா இளைஞர்களுக்குப் பரவுமா? - உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆரோவில் பகுதியில் தங்கியுள்ள வெளிநாட்டினரிடம் கரோனா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மருத்துவப் பரிசோதனை செய்திடவும் வலியுறுத்தினார். மேலும் ஆரோவில் பகுதியைச் சுற்றியுள்ள உணவகம், பேருந்து நிலையம், பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் கிருமி நாசினிகள் தெளித்து சுகாதாரமாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
ஆரோவில் பகுதியில் நாளை (22.03.2020) காலை முதல் மாலை வரை சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டாம் என ஆரோவில் நிர்வாகத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.