வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரவலாக சட்டவிரோதமாக காட்டன் சூதாட்டம் நடைபெற்று வருகின்றது. இதனால், அடித்தட்டு மக்கள், கூலித்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், ஏழை மக்கள் பசி பட்டினியால் வாடி வருகின்றனர். இதனைத் தடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெண்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக நடைபெறும் காட்டன் சூதாட்டத்தைத் தடுக்கக்கோரி வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த வுமன் இந்தியா மூமெண்ட் அமைப்பைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள், இன்று கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, கண்களை கட்டிக்கொண்டு வந்தால் உள்ளே அனுமதிக்க மாட்டோம், மாறாக கைது செய்வோம் என்று கூறியதால் மனு அளிக்க வந்த பெண்களுக்கும் காவல் துறையினருக்கும் சற்று நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், ஒரு மணி நேர காத்திருப்பிற்குப் பிறகு மனு அளிக்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் அலுவலர்களிடம் பெண்கள் மனு அளித்துவிட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் லாட்டரி குலுக்கல்: 14பேரை கைது செய்த தனிப்படையினர்