வேலூர் மாவட்டம், காட்பாடி இளையநெல்லூர் அடுத்த குப்பிரெட்டி கிராமத்தில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் துணை மின்நிலையம் அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 60 ஏக்கர் நிலத்தை மின்வாரிய அலுவலர்கள் கையகப்படுத்தி உள்ளனர். இதற்காக விவசாயிகளுக்கு சென்ட் ஒன்றுக்கு ரூ. 1,250 பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் இந்த பணம் போதாது என்றும், கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு சார் ஆட்சியர் தற்போது கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள், நீதிமன்றத்தில் ஆவணம் தாக்கல் செய்யும்போது கூடுதல் பணம் தருகிறோம் என்று உறுதி அளித்துள்ளார்.
ஆனால் சார் ஆட்சியர் கூறியபடி பணத்தை வழங்காததால் விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்ட் ஒன்றுக்கு 5 ஆயிரம் கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பல மாதங்களை கடந்தும் பாக்கி தொகையை கொடுக்காததால், விவசாயிகள் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இதைத்தொடர்ந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று நீதிமன்ற ஊழியர் அமீனா தலைமையில் வழக்கறிஞர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நான்காவது மாடியில் அமைந்துள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தனர். ஆனால் அங்கு சார் ஆட்சியர் இல்லை என்பதால், அவரை செல்ஃபோனில் தொடர்பு கொண்டபோது, இரண்டு வார காலம் அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.