வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் அமுதா (55). இவர் அதே பகுதியில் விறகு கடை வைத்துள்ளார். 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடையில் இருந்தபோது, வேலூர் மாவட்டம் தாமரைக்குளம் தெருவைச் சேர்ந்த முகமது கலில் (43) என்பவர் விறகு கடைக்கு வந்து திடீரென அமுதாவை மிரட்டி, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றார்.
இதுகுறித்து அமுதா வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்நிலையில் இன்று (டிச. 14) வழக்கு நீதிபதி பாலசுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அதில் முகம்மது கலில் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரத்து ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத்தை கட்ட தவறினால் மூன்று மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்பளித்தார்.
பின்னர் முகமது கலிலை போலீசார் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: விவசாய நிலத்தை கையகப்படுத்தும் அரசு - விவசாய தம்பதி தற்கொலை முயற்சி!