வேலூர் சிஎம்சிக்கு எதிரே உள்ள காந்தி சாலையில் உள்ளது பாபு ராவ் தெரு. சைதாப்பேட்டையைச் சேர்ந்த இப்பகுதிக்குள் யார் சென்றாலும் தனித்துவமான உணர்வு ஒன்று கிடைக்கும், அதற்குக் காரணம் இங்கு அதிகம் வசிக்கும் பெங்காலிகள்.
வேலூர் மாவட்டம் மருத்துவச் சுற்றுலாவுக்குப் பிரசித்திப் பெற்ற நகரம். இங்குள்ள சிஎம்சி மருத்துவமனை இதற்கு மிக முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. மேற்கு வங்கம், மிசோரம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, அஸ்ஸாம் போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்தும், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்தும் இம்மருத்துவமனைக்குப் பலர் சிகிச்சைக்காக வருகிறார்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் பெங்காலிகள். இவர்கள் தற்காலிகமாக பாபு ராவ் தெருவில் வசித்துவருகின்றனர். இவர்களைக் கவர்ந்திழுக்க இங்குள்ள வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு கொல்கத்தா மெடிக்கல்ஸ், தாக்கா மெடிக்கல்ஸ் போன்ற பெங்காலி பெயர்களைச் சூட்டுகின்றனர்.
சிஎம்சியில் நீண்ட நாள்கள் சிகிச்சை பெறும் நோயாளிகள் இப்பகுதியில் தற்காலிகமாகத் தங்கி சிகிச்சையை முடித்துவிட்டு அதன்பிறகு சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.
இது குறித்து அமீர் பாஷா என்ற சைதாப்பேட்டையைச் சேர்ந்த நபர் கூறுகையில், "கடந்த 45 ஆண்டுகளாக இங்கு வசித்துவருகிறேன். வெளியூரிலிருந்து இங்கு வருபவர்களுக்கு நாங்கள் உதவி புரிந்துவருகிறோம். அவர்களால் எங்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இப்பகுதியில் வசித்துவந்த சிலர் தங்களது வீடுகளைத் தங்கும் விடுதிகளாக மாற்றி வாடகைக்கு விட்டுவிட்டு அருகில் உள்ள பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் இங்கு வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வந்துசெல்கின்றனர். அதற்கு முன்பு வரை இந்திய மாநிலங்களிலிருந்துதான் மக்கள் வந்துசென்றனர்.
இங்குள்ள 60 விழுக்காட்டினர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். பலரும் இங்கு குடிபெயர்ந்து சொந்தமாகத் தொழில் செய்துவந்தாலும் இதுவரை எங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டது இல்லை" என்றார்.
வேலூரில் ஒரு குட்டி பெங்கால் மேலும் இவர்கள் இப்பகுதியை ஆக்கிரமிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனரா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "இவர்கள் அண்ணன் தம்பி போன்றுதான் எங்களுடன் பழகிவருகின்றனர். எங்களை மீறி அவர்கள் எதுவும் செய்துவிடுவதில்லை" என்றார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த ரகிபுர் ரஹ்மான் நம்மிடம் கூறுகையில், "நான் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்காக இங்கு வந்துள்ளேன். சைதாப்பேட்டை மக்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
வேலூரின் மற்ற பகுதிகளைவிட இவர்கள் எங்களது மொழி, கலாசாரம் ஆகியவற்றை நன்கு அறிந்துவைத்துள்ளனர். வேலூர் வந்தால் மீண்டும் சைதாப்பேட்டைக்கு நிச்சயம் வருவேன்" என்றார்.
இந்தி பேசும் மக்களின் புரிதலுக்காக முக்கிய இடங்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டு பார்த்திருப்போம். ஆனால், சைதாப்பேட்டை பாபு ராவ் தெருவில் பெங்காலிகளுக்காகவே மருத்தகத்திலிருந்து உணவகத்தில் உள்ள மெனு கார்ட் வரை அனைத்து வணிக இடங்களிலும் பெங்காலி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பகுதி வேலூரின் தனித்துவமான பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 6 நிமிடத்திற்குள் 128 பிரபலங்களின் குரலைப் பேசி கோவை இளைஞர் சாதனை!