திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் செங்குளம் காலனியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கென்று இங்கு கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில் 685 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தப் பகுதியில் 19 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
குடிசை மாற்று வாரிய கட்டுப்பாட்டிலிருந்த குடியிருப்பில் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காக மாநகராட்சி வசம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போதுவரை மாநகராட்சி இந்த இடத்தை கையகப்படுத்தவில்லை. குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த ஜூன் மாதம் மாநகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனினும் தற்போதுவரை இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இங்குள்ள தெருவிளக்குகளும் கடந்த ஆறு மாதங்களாக எரியாமல் உள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து திருச்சி மாநகரம் பாலக்கரை பாஜக மண்டலத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகத்தின் முன்பு அரிக்கேன் விளக்கு ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த குடிசை மாற்று வாரியத் துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் உடனடியாக சம்பந்தப்பட்ட செங்குளம் காலனியில் குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தெரு விளக்குகள் எரிய பயன்படுத்தப்படும் மின்சார ஸ்விட்சை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்திருப்பது தெரியவந்தது.
இதை சரிசெய்து ஓரிரு நாள்களில் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க.... 'தெரு விளக்கு வெளிச்சத்துல முன்னேறி வருவோம்' - நரிக்குறவர் மாணவியின் சாதனை