சென்னை: தமிழ்நாடு அரசின் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' என்ற பெயரில் பெண்கள் கட்டணமில்லாமல் வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (பிப்.10) சென்னை அய்யப்பன்தாங்கலில் இருந்து தடம் 26 எண் கொண்ட மாநகர பேருந்து பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வடபழனி தனியார் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது அதில் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏறியுள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள் ஏற்கனவே இருக்கைகளில் அமர்ந்திருந்த பெண்கள், வயதானவர்களை எழுப்பிவிட்டு அமர்ந்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும், ஒரே இருக்கையில் மூன்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமர்ந்து கொண்டு ரகளையில் ஈடுப்பட்டதோடு, பெண்களை எழுப்பும் போது ''நீங்க ஓசி டிக்கெட்டில் தானே வர்றீங்க..? நாங்க காசு கொடுத்து வரோம்.. எழுந்துக்க மாட்டோம்'' என கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: மாநகராட்சி ஆகி 3 ஆண்டுகள் நிறைவு...இன்னும் கிடைக்காத அடிப்படை வசதிகள்
இதில் மன வேதனை அடைந்த பெண் பயணி ஒருவர் மகளிர் இருக்கையில் அந்த இளைஞர்கள் அமர்ந்திருப்பதையும், மகளிர் நின்று கொண்டு வருவதையும் வீடியோவாக எடுத்து அந்த இளைஞர்களிடம் கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அந்த பெண் பயணியை ''நீங்கள் மட்டும் தான் வீடியோ எடுப்பீங்களா? நாங்களும் தான் எடுப்போம். நாங்களும் கஷ்டப்பட்டுத் தானே பயணிக்க வரோம்'' என அந்த பெண் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இன்று காலை நடந்த இச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமைச்சர் சர்ச்சை பேச்சு
இதே போல கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, இலவச பேருந்து குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "பெண்கள் நீங்கள் எங்கே போனாலும் ஓசி தான்.. ஓசி பஸ்சில் தான் போறீங்க" என கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சென்னையில் இன்று பேருந்தில் இலவசமாக பயணித்த பெண்களிடம் 'ஓசி டிக்கெட்' என விமர்சித்து இளைஞர்கள் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.