திருச்சி: மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என உழவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறுவிதமான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக டெல்லியில் சென்று போராடுவதற்கு இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அரை நிர்வாணத்துடன், நெற்றியில் நாமமிட்டு, மனித எலும்புக்கூடு ஏற்கலப்பை உடன் சென்றனர். இதற்கு அனுமதி மறுத்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
சாலையில் அமர்ந்து தர்ணா
இதனால் காவல் துறையினருக்கும், உழவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து திருச்சி - கரூர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் ஒன்றிய அரசைக் கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
மணப்பாறை வீரப்பூரைச் சேர்ந்த உழவர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு நிர்வாணத்துடன் கண்டன கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்களைக் காவல் துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி கைதுசெய்தனர்.
மேலும் விவசாயிகள் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்களுடன் வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : ரஷ்யா விண்வெளி பயிற்சிக்குச் செல்லும் அரியலூர் மாணவிகள்