திருச்சி மாவட்டம், கீழ்கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கீழ்கல்கண்டார் கோட்டை பகுதியில் 2000-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள மக்களின் முதன்மை தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.
600 ஏக்கர் பகுதியில் வாழைப்பழம், நெல், உளுந்து ஆகியவை விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது கீழ்கல்கண்டார் கோட்டை கழிவு நீர் சேகரிப்பு நிலையம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் என இரண்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் நிலம், நீர், காற்று, பொது சுகாதாரம் கேள்விக்குள்ளாகும் நிலை உள்ளது.
மேலும், விவசாய நிலம் நஞ்சாக மாறவும், நிலத்தடி நீர் மாசுப்படும். வேதியல் பொருட்களை வைத்து கழிவு நீர் சுத்தம் செய்யப்படுவதால் காற்று மாசுபடும் சூழ்நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள், விவசாயம் மற்றும் விலங்குகள் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. இப்பகுதியில் கழிவு நீர் சேகரிப்பு நிலையம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.